மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மேலும் ஒரு அல்கொய்தா பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி:
பாகிஸ்தான் தூண்டுதலில் அல்கொய்தா பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி வருவது தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) தெரிய வந்தது.
இதையடுத்து, கடந்த 19-ந் தேதி, மேற்கு வங்காளத்திலும், கேரளாவிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் 6 அல்கொய்தா பயங்கரவாதிகளும், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
சமூக வலைத்தளங்கள் மூலம், அவர்களை பாகிஸ்தானில் உள்ள அல்கொய்தா பயங்கரவாதிகள் மூளைச்சலவை செய்து இந்தியாவில் தாக்குதல் நடத்த தூண்டி விட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில், நேற்று முன்தினம் மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மேலும் ஒரு அல்கொய்தா பயங்கரவாதி கைது செய்யப்பட்டார். அவர் பெயர் சமிம் அன்சாரி. அவரை முர்ஷிதாபாத் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆஜர்படுத்தி, டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.
Source: Maalaimalar