கொரோனாவை கண்டு பயப்பட வேண்டாம் எனவும், இன்று தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறேன் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்பும் (74 வயது) அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் கடந்த 2-ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா ஆகிய இருவருக்குமே கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் வெள்ளைமாளிகையில் இருந்த டொனால்டு டிரம்பிற்கு லேசான அறிகுறியுடன் காய்ச்சல் ஏற்பட்டது.
காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வந்ததையடுத்து, கடந்த 3-ம் தேதி மேல் சிகிச்சைக்காக அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய ராணுவ மருத்துமனையில் அதிபர் டொனால்டு டிரம்ப் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது டிரம்ப்பின் நிலைமை சற்று மோசமாக இருந்ததாக தகவல் வெளியான நிலையில் அவர் ரெம்டெசிவிர் மருந்தை தொடர்ந்து எடுத்து வந்தார். இதையடுத்து, அவரது உடல்நிலை சீரடைந்தது.
இதற்கிடையில், வால்டர் ரேட் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த டிரம்ப் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நேற்று திடீரென காரில் சென்று மருத்துவமனைக்கு வெளியே நின்று கொண்டிருந்த தனது ஆதரவாளர்களை பார்வையிட்டார்.
இந்நிலையில், தான் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவை கண்டு பயப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ’நான் வால்டர் ரேட் ராணுவ மருத்துவமனையில் இருந்து இன்று மாலை 6.30 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணி) டிஸ்சார்ஜ் ஆகிறேன்.
நான் தற்போது நன்றாக உணருகிறேன். கொரோனாவை கண்டு பயப்பட வேண்டாம். இந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள்… டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் நாங்கள் இந்த வைரசுக்கு சிறப்பான தடுப்பூசிகளையும், தகவல்களையும் உருவாக்கியுள்ளோம். நான் 20 ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்ததை விட நன்றாக உணருகிறேன்…
பாதுகாப்பான வாகனத்தில் சென்று மருத்துவமனைக்கு வெளியே நாட்கணக்கிலும், மணிக்கணக்கிலும் நின்றுகொண்டிருந்த எனது ஆதரவாளர்களுக்கு நான் நன்று தெரிவிக்கச்சென்றதால் சில ஊடகங்கள் வருத்தமாக உள்ளது என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
நான் இவ்வாறு செய்யவில்லை என்றால் ஊடகங்கள் என்னை ’முரட்டுத்தனமானவன்’ என கூறும்’ என பதிவிட்டுள்ளார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar