பிறந்த குழந்தையின் தாயை தேட பெண் பயணிகளை விமானத்திலிருந்து இறக்கி பரிசோதித்ததற்கு கத்தார் அரசு மன்னிப்பு கோரியுள்ளது.
தோகா:
கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், கடந்த 2-ந் தேதி விமான நிலையத்தின் கழிவறையில் குறைமாதத்தில் பிறந்த குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையின் தாயை உடனடியாகக் கண்டுபிடிப்பதற்காக, விமான நிலையத்தில் வெளிநாடு செல்லத் தயாராக இருந்த பெண் பயணிகளுக்கு கட்டாய மருத்துவப் பரிசோதனை செய்து, யாருக்கேனும் குழந்தை பிரசவித்ததற்கான அடையாளம் இருக்கிறதா என்பதை கண்டறிய முனைந்தனர்.
ஆஸ்திரேலியா செல்லவிருந்த கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இருந்த பெண் பயணிகளை விமானத்திலிருந்து இறக்கி கட்டாய உடல் பரிசோதனை நடத்தினர். இதற்கு ஆஸ்திரேலியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதுபோன்றதொரு பரிசோதனை, பாலியல் வன்கொடுமைக்கு இணையானது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கண்டித்தனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கத்தார் அரசு மன்னிப்பு கோரியுள்ளது.
அதேவேளையில் குழந்தையைப் பெற்றெடுத்த தாயைக் கண்டறிந்து உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கவே சோதனை நடத்தப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
[embedded content]
Source: Maalaimalar