Press "Enter" to skip to content

வேலையில்லா திண்டாட்டம் பற்றி மோடி பேசுவது இல்லை – ராகுல் குற்றச்சாட்டு

வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட நாட்டின் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி பேசுவதே இல்லை என்று பீகார் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி குற்றம் சுமத்தினார்.

பாட்னா:

பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைமையிலான மெகா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது 2-வது கட்ட பிரசாரத்தை நடத்தினார்.

சம்பரான் மாவட்டம், வால்மீகி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில், அந்த நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரவேஷ்குமார் மிஷ்ராவையும், சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர் ராஜேஷ் சிங்கையும் ஆதரித்து பேசினார். அவர் கூறியதாவது:-

பஞ்சாப்பில் தசரா கொண்டாட்டத்தின்போது, பிரதமர் மோடியின் உருவப்பொம்மை எரித்ததை பார்த்தபோது நான் வேதனை அடைந்தேன்.

நமது பிரதமர், பீகார் முதல்-மந்திரியுடன் கலந்து கொள்ளும் கூட்டங்களில் பல நாடுகளைப்பற்றி பேசுகிறார். ஆனால் நமது நாடு சந்தித்து வருகிற வேலையில்லா திண்டாட்டம் பற்றி மட்டும் பேசுவதே இல்லை. இது பஞ்சாப், பீகார், உத்தரபிரதேசத்தில் உள்ள இளைஞர்கள், விவசாயிகளை கோபம் அடைய வைத்துள்ளது.

தற்போது பிரதமர் மோடி தனது கூட்டங்களில் 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்று சொல்வதும் இல்லை. ஏனென்றால் அவர் பொய் சொல்கிறார் என்பதை பீகார் மக்கள் உணர்ந்து விட்டார்கள்.

இப்போது பிரதமர் இங்கு வந்து 2 கோடி பேருக்கு வேலை தருவதாக உறுதி அளித்தால், அவர் பொய் சொல்கிறார் என்று கூட்டம் துரத்தியடிக்கும் என்று உறுதியாக சொல்கிறேன்.

நாட்டை எப்படி வழிநடத்த வேண்டும், விவசாயிகளுடன் எப்படி நிற்க வேண்டும், இளைஞர்களுக்கு எவ்வாறு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு தெரியும். ஆனால் எங்களுக்கு பொய் சொல்லத்தெரியாது.

மத்திய அரசு இயற்றியுள்ள 3 வேளாண் சட்டங்கள், 2006-ம் ஆண்டு பீகாரில் மண்டிமுறை ஒழிக்கப்பட்டபோது செயல்படுத்தப்பட்டது. நிதிஷ் குமார் 2006-ல் பீகாரில் செய்ததை நரேந்திர மோடி பஞ்சாப், அரியானா மற்றும் நாடு முழுவதும் செய்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து தர்பங்கா மாவட்டம், குசேஷ்வர் அஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு மெகா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »