நடிகர் ரஜினிகாந்த் வெளியிட இருந்ததாக ஒரு அறிக்கை நேற்று சமூகவலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டது. அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட இருந்ததாக ஒரு அறிக்கை நேற்று சமூகவலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டது. அந்த அறிக்கையில் கொரோனா நோய் தொற்று காரணமாக தன்னுடைய அரசியல் திட்டங்களை திட்டமிட்டபடி செயல்படுத்த முடியவில்லை என்பதையும் மருத்துவர்கள் மற்றும் நண்பர்கள் ஆலோசனைப்படி இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்குவது இயலாத செயல் என்பதையும் ரஜினி விளக்கி இருந்தார். ரஜினி தரப்பில் இருந்து இதை உறுதிபடுத்தாத நிலையில் அந்த அறிக்கை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar