பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு உயர்நீதிநீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வரும் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக நடத்தும் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். நவம்பர் 6-ந்தேதி திருத்தணியில் தொடங்கும் வேல் யாத்திரை, டிசம்பர் 6-ந்தேதி திருச்செந்தூரில் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்றும், பாபர் மசூதி இடிப்பு தினத்தில் வேல் யாத்திரை நிறைவடைய இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், தமிழக டிஜிபி, பாரதிய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரைக்கு தடை கோரிய வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் நடைபெற்றது. பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரிய வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதம் செய்தார்.
இந்நிலையில் நாளை தொடங்க உள்ள பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு தகவல் தெரிவித்தது. மேலும் கொரோனாவுக்கான 2, 3ம் அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ள நிலையில் வேல் யாத்திரையை தடுப்பது சரியல்ல என பாரதிய ஜனதா தரப்பில் வாதிடப்பட்டது.
‘கொரோனா தொற்று குறைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. வேல் யாத்திரையின்போது குறிப்பிட்ட எந்த பகுதியிலும் தங்கப்போவதில்லை. குறிப்பிட்டு எந்த பகுதியையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிக்கவில்லை’ என்றும் பாரதிய ஜனதா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar