பீகாரில் இன்று 78 சட்டசபை தொகுதிகளில் நடைபெற்று வரும் இறுதிக்கட்ட தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பாட்னா:
பீகாரில் மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 28-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 3-ம் தேதியும் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
பனி மற்றும் குளிர் காரணமாக காலையில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்தது. அதன்பின்னர் வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கினர்.
மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள், பிரபலங்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்குச் சென்று ஓட்டு போட்டனர். கத்திகாரில் உள்ள வாக்குச்சாவடியில் மாநிலங்களவை உறுப்பினர் அகமத அஷ்பக் கரிம் தனது வாக்கை பதிவு செய்தார்.
வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்கும்படி பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, பாஜக தலைவர் நட்டா, தேஜஸ்வி யாதவ், சிரக் பஸ்வான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
19 மாவட்டங்களில் அடங்கியுள்ள 78 சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இந்த தேர்தலில், மொத்தம் 1204 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இத்தொகுதிகளில் 2 கோடியே 35 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள் ஆவர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar