தடையை மீறி டெல்லி நோக்கி பேரணி செல்ல முயன்ற விவசாயிகள் மீது காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி நோக்கி நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் மிகப்பெரிய பேரணி நடத்தி, டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். இப்போராட்டத்திற்கு பாரதிய கிசான் யூனியன், அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புகள் இதற்காக அழைப்பு விடுத்தன. அதன்படி பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் டிராக்டர்களிலும், நடந்தும் டெல்லியை நோக்கி சென்றனர்.
ஆனால் இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டெல்லி நோக்கிச் செல்லும் அனைத்து பாதைகளையும், பஞ்சாபில் இருந்து அரியானா மாநிலத்திற்குள் நுழையும் அனைத்துப் பாதைகளையும் காவல் துறையினர் அடைத்தனர். பொதுமக்களின் வாகனங்கள் மட்டும் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டன. எல்லையில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டது. ஆளில்லா விமானம் மூலமாகவும் போராட்டக்காரர்களை கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.
தடையை மீறி பேரணியாக செல்ல முயற்சிக்கும் விவசாயிகளை காவல் துறையினர் விரட்டியடித்தவண்ணம் உள்ளனர். ஆனால், விவசாயிகள் எல்லையிலேயே முகாமிட்டு தொடர்ந்து டெல்லி செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எல்லையில் போராட்டம் நடத்துவதால் பதற்றம் நிலவுகிறது.
#WATCH Police use tear gas shells to disperse protesting farmers at Singhu border (Haryana-Delhi border).
Farmers are headed to Delhi as part of their protest march against Centre’s Farm laws. pic.twitter.com/Z0yzjX85J5
— ANI (@ANI)
இந்நிலையில், இன்று காலையிலும் சிங்கு எல்லையில் (அரியானா-டெல்லி எல்லை) விவசாயிகள் முன்னேறிச் செல்ல முயன்றனர். தங்களை டெல்லி செல்ல அனுமதிக்கும்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி டெல்லி செல்லவும் முயற்சித்தனர். அவர்கள் மீது காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். இதனால் விவசாயிகள் நிலைகுலைந்து போயினர். ஆனாலும் அந்த பகுதியை விட்டு அகலாமல் உள்ளனர்.
இப்போராட்டம் காரணமாக சிங்கு எல்லையில் காவல் துறை பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது. இன்று எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள், மேற்கு மற்றும் கிழக்கு புற அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தலாம் என டெல்லி போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar