இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது.
புதுடெல்லி:
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றில் இருந்து விடுபடுவதற்கு இந்தியா திறம்பட போராடி வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்து இருக்கிறது.
கொரோனா மீட்பைப் பொறுத்தமட்டில் வலுவான மருத்துவ கட்டமைப்பு வசதிகளும், நல்ல சிகிச்சையும் இருப்பதால் உலகளவில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 19 ஆயிரத்து 587 பேர் கொரோனா வைரசின் கோரப்பிடியில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 5,110 பேரும், மராட்டியத்தில் 2,570 பேரும், மேற்கு வங்காளத்தில் 1,271 பேரும் கொரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது. சரியாக 1 கோடியே 16 ஆயிரத்து 859 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கொரோனா மீட்பு விகிதம் 96.36 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 3 லட்சத்து 95 ஆயிரத்து 278 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 222 பேர் கொரோனாவில் இருந்து மீள்வதற்கு பெற்ற சிகிச்சை பலன் அளிக்காமல் பலியாகி உள்ளனர். இதுவரையில் இந்தியாவில் கொரோனாவுக்கு 1 லட்சத்து 50 ஆயிரத்து 336 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.
தொடர்ந்து 17-வது நாளாக நாட்டில் கொரோனாவில் இருந்து விடுபடுவதற்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.
இன்றைய நிலவரப்படி பல்வேறு மருத்துவமனைகளில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 83 பேர் கொரோனாவில் இருந்த மீள்வதற்காக தொடர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் 2.19 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar