Press "Enter" to skip to content

பிரியாவிடை நிகழ்ச்சியில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு வேண்டும் என்ற டிரம்ப் – கோரிக்கையை நிராகரித்த பென்டகன்

டொனால்டு டிரம்ப்பின் பதவிகாலம் நாளையுடன் நிறைவடைய உள்ளது. இதற்கான பிரியாவிடை கொடுக்கும் நிகச்சியில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு வேண்டும் என அமெரிக்க ராணுவ தலைமையிடம் டொனால்டு டிரம்ப் கோரிக்கை விடுத்தார்.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார்.

குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் தோல்வியடைந்தனர்.

இதற்கிடையில், தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது.

அப்போது நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் காவல் துறை அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

அமெரிக்க அதிபராக வரும் ஜோ பைடன் வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ளார். பைடன் பதவியேற்பு விழாவையொட்டி பாராளுமன்ற கட்டிடம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய அதிபர் டிரம்பின் பதவி காலம் வரும் 20-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. வழக்கமாக அமெரிக்க அதிபர் ஒருவர் தனது பதவி காலம் முடிவடையும் போது அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த நிகழ்ச்சியில் அதிபரின் அரசில் இடம்பெற்றிருந்த பலரும் வெளியேறும் அதிபருக்கு வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை கொடுப்பர்.

அந்த வகையில், டொனால்டு டிரம்ப்பின் பதவிகாலம் நாளையுடன் நிறைவடைவதால் பிரியாவிடை நிகழ்ச்சிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சியில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்த வேண்டும் என தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க ராணுவத்திடம் கோரிக்கை விடுத்தார். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் டிரம்ப் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், டிரம்பின் கோரிக்கையை பென்டகன் நிராகரித்துள்ளது. ஜோ பைடன் பதவியேற்பு விழா பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற உள்ளது. அந்த விழாவுக்கான பாதுகாப்புக்காக தேசிய பாதுகாப்பு படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ஆகையால், அதிபர் டிரம்ப்பின் பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சியில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என பென்கடன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »