எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆவதற்கு தகுதி உள்ளது. ஸ்டாலினுக்கு கருணாநிதி மகன் என்ற ஒரே தகுதி தான் உள்ளது என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனை ஆதரித்து பா.ம.க. இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆரணியில் நேற்று மாலை அண்ணா சிலை அருகே திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஒரு விவசாயி. நம்மில் ஒருவர் விவசாயியாக இருப்பது பெருமை. ஆனால் தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளராக இருப்பவர் ஒரு அரசியல் வியாபாரி. ஆனால் நம் கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளராக இருப்பவர் ஒரு சாமானியர், நெற்றியில் வேர்வை சிந்தும் அவர்தான் விவசாயி.
எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆவதற்கு தகுதி உள்ளது. ஸ்டாலினுக்கு கருணாநிதி மகன் என்ற ஒரே தகுதி தான் உள்ளது. சமூகநீதி அடிப்படையில் 40 ஆண்டு காலமாக நாம் கோரிக்கை வைத்து வந்தோம். தற்போது 10.5 சதவீத இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஸ்டாலின் சட்டமன்றத்தில் என்றைக்காவது மக்கள் பிரச்சினை குறித்து பேசியுள்ளாரா? ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் வெளிநடப்பு செய்வது தான் வாடிக்கையாக வைத்திருந்தார்.
தி.மு.க. கட்சியானது தற்போது ஒரு நிறுவனம்யாக தான் செயல்படுகிறது. பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் என்பவரை தான் நம்பியுள்ளது. கட்சியில் உள்ளவர்களை நம்பவில்லை. மு.க.ஸ்டாலினிடம் கொள்கையில்லை. பிரசாந்த் கிஷோர் சொல்பவர் தான் நகர, ஒன்றிய செயலாளர்கள், ஏன் வேட்பாளர்கள் கூட அவர் சொல்பவர் தான். மேலும் ஒருபடி மேலேசொல்லவேண்டும் என்றால் வாக்குச்சாவடி மையத்தில் யார் அமரவேண்டும் என்று கூட அவர்கள் தான் முடிவு செய்வார்கள்.
இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். நமது கூட்டணி கட்சியின் வேட்பாளரான அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நன்கு அறிமுகமானவர், அவரை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும்.
தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மந்திரியான ராசா முதல்-அமைச்சரை விமர்சனம் செய்கிறார். அவரது தாயார் உயிருடன் இல்லை, அவரை தவறாக பேசி வருகிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதான் அவர்களின் நிலை. நம்கூட்டணி கட்சிகள் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற அனைவரும் பாடுபடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் ஆ.வேலாயுதம், மாவட்ட துணை செயலாளர் வடிவேல், ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, நிர்வாகிகள் வெங்கடேசன், ராஜசேகர், சதீஷ்குமார், சேவூர் சிவா, பேராசிரியர் சிவா, சேவூர் குமார், பிச்சாண்டி, மெய்யழகன், ஏ.கே.ராஜேந்திரன், கருணாகரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் கோவிந்தராசன், கஜேந்திரன், சேகர், திருமால், சங்கர், சீனுவாசன், எம்.வேலு, உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar