தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உதவியாளர் வீட்டில் 1½ மணி நேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி:
சட்டமன்ற தேர்தலையொட்டி வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் சீனிவாச பெருமாள் வீட்டில் நேற்று மதியம் 3 மணி அளவில் மதுரை கோட்டத்தை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 6 பேர் குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.
சுமார் 1½ மணி நேரம் நடந்த இந்த சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “சென்னையில் உள்ள வருமானவரித்துறை தலைமை அலுவலகத்திற்கு போன் மூலம் ஒரு புகார் வந்தது. அதன்பேரில் மதுரையில் இருந்து நாங்கள் திருத்தங்கலில் வசித்து வரும் சீனிவாச பெருமாள் வீட்டிற்கு வந்து சோதனை நடத்தினோம்” என்று தெரிவித்தார்.
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar