Press "Enter" to skip to content

கர்நாடகாவில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் – முதல் மந்திரி எடியூரப்பா

கர்நாடக மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கு வரும் 24-ம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தினசரி நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் கர்நாடகம், நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இந்த ஊரடங்கு அமலில் உள்ளது. பெங்களூருவில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மாநிலத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் கர்நாடக அரசு மிகுந்த கவலை அடைந்துள்ளது.

இதற்கிடையே மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கு வரும் 24-ம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்த ஊரடங்கு முடிவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. கர்நாடகத்தில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது, மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்க முதல் மந்திரி எடியூரப்பா நேற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த  எடியூரப்பா, “ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். தற்போது அமலில் உள்ள ஊரடங்கு 24-ம் தேதி வரை இருக்கும்.  அதன்பிறகு  2-3 தினங்களில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு செய்வோம்” என தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »