இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவுவதை தடுக்கிற வகையில் தொற்று மாதிரி பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவுவதை தடுக்கிற வகையில் தொற்று மாதிரி பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த பல நாட்களாக தினமும் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 20.08 லட்சம் மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் இந்த அளவுக்கு வேறு எந்த உலக நாட்டிலும் கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்படவில்லை. எனவே இது உலகளவில் சாதனை அளவாக பார்க்கப்படுகிறது.
இந்த பரிசோதனையின் பாதிப்பு விகிதம் 13.31 சதவீதம் என்ற தகவலையும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில் 32 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் பாதிப்பு விகிதம் 7.96 சதவீதம் ஆகும்.
நேற்று புதிதாக தொற்று பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 67 ஆயிரத்து 334 பேரில் 74.46 சதவீதத்தினர் தமிழகம், கேரளா, கர்நாடகம், மராட்டியம், ஆந்திரா, மேற்கு வங்காளம், ஒடிசா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
கொரோனா மீட்பு சிகிச்சை பெறும் 32.26 லட்சம் பேரில் 69.02 சதவீதத்தினர் கர்நாடகம், மராட்டியம் கேரளா, தமிழகம், ஆந்திரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar