டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும், பைசர், மாடர்னா தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வினியோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
புதுடெல்லி:
டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா நேற்று காணொலி வாயிலாக பேசுகையில், டெல்லி அரசுக்கு நேரடியாக தடுப்பூசிகளை விற்க முடியாது, இதுதொடர்பாக மத்திய அரசுடன் மட்டும்தான் பேசுவோம் என்று பைசர், மாடர்னா தடுப்பூசி நிறுவனங்கள் தெரிவித்துவிட்டன.
எனவே, தடுப்பூசி கையிருப்பு தீர்ந்துவிட்டதால், டெல்லியில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கான அனைத்து 400 தடுப்பூசி மையங்களும் மூடப்பட்டுவிட்டன. அதேபோல, 45 வயதுக்கு மேற்பட்டோர், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கான தடுப்பூசி மையங்களும் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டுள்ளன.
பைசர், மாடர்னா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதேநேரம் உலக நாடுகள் பலவும் அவற்றுக்கு ஒப்புதல் அளித்து, வாங்கியுள்ளன. எனவே இந்த தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு போர்க்கால வேகத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றார்.
முன்னதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும், பைசர், மாடர்னா தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வினியோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
நேற்று முன்தினம் பஞ்சாப் மூத்த அதிகாரி ஒருவர், அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் மாநிலத்துக்கு தடுப்பூசிகளை அனுப்ப மறுத்துவிட்டதாகவும், இதுதொடர்பாக மத்திய அரசுடன்தான் பேசுவோம் என்று கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
[embedded content]
Source: Maalaimalar