ரூ.14 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டு, வெளிநாட்டில் தலைமறைவான மெகுல் சோக்சியை காணவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இதனால், சி.பி.ஐ. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.
இதில், கீதாஞ்சலி குழும உரிமையாளரான மெகுல் சோக்சி, ஆன்டிகுவாவில் தஞ்சம் அடைந்தது தெரியவந்தது. அவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் ஆன்டிகுவாவுடன் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் சோக்சியை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.
அவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் விசாரணைக்கு ஆஜராக மெகுல் சோக்சிக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, மெகுல் சோக்சிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்தது. மெகுல் சோக்சி மீது சி.பி.ஐ. 2 குற்றப்பத்திரிகைகளையும் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டில் தலைமறைவான மெகுல் சோக்சியை காணவில்லை என அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் செய்தியாளர்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் அகர்வால் கூறுகையில், மெகுல் சோக்சியை காணவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் வருத்தமும், வேதனையும் அடைந்துள்ளனர். இதுபற்றி ஆலோசிக்க என்னை அழைத்துள்ளனர். ஆன்டிகுவா காவல் துறையினர் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar