தமிழகத்தில் வெப்ப சலனத்தால் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் வடக்கு ஒடிசா மற்றும் வங்காளதேசம் இடையே நாளை கரையை கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக நாளை வரையில் தமிழகம், ஆந்திர கடலோர பகுதிகள், தென்மேற்கு, மத்திய வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 80 கி.மீ. வேகம் வரையில் காற்று வீசக்கூடும் என்று ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
புயலால் தமிழகத்தில் பெரிய அளவுக்கு மழை வாய்ப்பில்லை என்றபோதிலும், தரைக்காற்று தமிழகத்தில் வீசுவதால் வெப்ப சலனம் காரணமாக, சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
வெப்ப சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனேயே காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரியாகவும் இருக்கும்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, சிவலோகம் பகுதிகளில் தலா 5 செ.மீ. பதிவாகி இருக்கிறது. ஈரோடு மாவட்டம் பவானியில் 4 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லார், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் தலா 3 செ.மீ., தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், நீலகிரி மாவட்டம் குன்னூரில் தலா 2 செ.மீ. என மழை பெய்துள்ளது. டேனிஷ்பேட்டை, வால்பாறை, பேச்சிப்பாறை, அவலாஞ்சியில் தலா 1 செ.மீ. மழையும் பெய்திருக்கிறது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar