Press "Enter" to skip to content

மாநில அரசுகளிடம் 1¾ கோடி தடுப்பூசிகள் கையிருப்பு – மத்திய அரசு தகவல்

தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

புதுடெல்லி:

மாநில அரசுகளிடம் இன்னும் 1¾ கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் மேலும் 1 லட்சம் டோஸ்கள் கிடைக்கும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மேலும் உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநில அரசுகளே நேரடியாக கொள்முதல் செய்வதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இவ்வாறு மாநிலங்கள் பெறப்படும் தடுப்பூசி மற்றும் போடப்பட்ட தடுப்பூசிகளின் அளவை மத்திய சுகாதார அமைச்சகம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் நேற்று காலை 8 மணி வரையிலான நிலவரங்களை நேற்று வெளியிட்டு இருந்தது.

அதன்படி மத்திய அரசு வழங்கியவை மற்றும் மாநிலங்கள் கொள்முதல் செய்தவையாக மொத்தம் 22 கோடியே 59 ஆயிரத்து 880 டோஸ் தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதுவரை பெற்றிருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இதில் வீணானவை உள்பட மொத்தம் 20 கோடியே 13 லட்சத்து 74 ஆயிரத்து 636 டோஸ்கள் இதுவரை பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், மீதமுள்ள 1 கோடியே 77 லட்சத்து 52 ஆயிரத்து 594 டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் கையிருப்பில் உள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

இதைத்தவிர அடுத்த ஓரிரு நாட்களில் மேலும் 1 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கிடைக்கும் எனவும் சுகாதார அமைச்சகம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

அதேநேரம் மாநிலங்களிடம் கையிருப்பில் உள்ள தடுப்பூசி டோஸ்கள் தொடர்பாக தவறான தகவல்களை வெளியிட்டு வருவதாக மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் மீது ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.

தடுப்பூசி இல்லாததால் நாடு முழுவதும் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘நாடு முழுவதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் இவ்வேளையில், மாநிலங்களிடம் 1 கோடி தடுப்பூசி இருப்பதாக ஹர்சவர்தன் கூறியுள்ளார். ஆனால் அனைத்து மாநிலங்களும் அதை பயன்படுத்தினால் வெறும் ஒரு நாளில் அனைத்து டோஸ்களும் தீர்ந்து விடும். ஏப்ரல் 2-ந்தேதி 42 லட்சம் டோஸ்கள் நாடு முழுவதும் போடப்பட்டு இருந்தன. தற்போது வெறும் 16 லட்சம் டோஸ்களே போடப்படுகின்றன’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

மத்திய மந்திரியின் இதுபோன்ற அறிவிப்புகள் மக்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »