Press "Enter" to skip to content

தமிழ் உள்பட 8 மொழிகளில் பொறியியல் பாடங்கள்- ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தகவல்

ஆங்கிலத்தில் உள்ள பொறியியல் பாடப் புத்தகங்களை தமிழ், இந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி ஆகிய 8 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.

நாக்பூர்:

தேசிய கல்விக்கொள்கையில் 2019-ம் ஆண்டு பல்வேறு திருத்தங்களும், மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு, கஸ்தூரி ரங்கன் தலைமையில் பரிந்துரைக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதில் உள்ள மும்மொழிக்கொள்கை, நுழைவுத் தேர்வு உள்ளிட்ட அம்சங்கள் கடுமையாக எதிர்க்கப்பட்டன.

அதேநேரம், தாய்மொழியில் கல்வி கற்கவேண்டும் என கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தாய்மொழியில் கல்வி பயில்வதை ஊக்குவிக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ.) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக, ஆங்கிலத்தில் உள்ள பொறியியல் பாடப் புத்தகங்களை தமிழ், இந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி ஆகிய 8 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.

இதுதொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் அனில் சகஸ்ரபுத்தே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரை தாய்மொழியில் பயிலவேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. அதன்படி, பொறியியல், தொழில்நுட்பம் சார்ந்த பாடத்தை தமிழ், பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தெலுங்கு ஆகிய 8 மொழிகளில் பேராசிரியர்களைக் கொண்டு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

ஆங்கிலத்தில் உள்ள தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தைகளை துல்லியமாக இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதில் சிக்கல்கள் நீடித்தது. எனவே, முக்கியமான தொழில்நுட்ப வார்த்தைகள் ஆங்கிலத்தில் அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டு வருகின்றன.

இந்த மொழிபெயர்ப்பு பணி 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. அதிகபட்சமாக இந்தியில் 132 பாடப்பிரிவுகளுக்கான பாடப் புத்தகங்களும், தமிழில் 94 பாடப் பிரிவுகளுக்கான புத்தகங்களும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அதேபோல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தைகளை மொழிபெயர்க்க சென்னை ஐ.ஐ.டி. உள்ளிட்ட முன்னணி ஐ.ஐ.டி.கள் இணைந்து புதிய செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கி உள்ளது.

இதில் 90 முதல் 92 சதவீதம்வரை துல்லியமாக மொழிபெயர்க்கப்படுகிறது. மொழிபெயர்ப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, வரும் கல்வியாண்டு முதல் தாய்மொழியில் பொறியியல் பாடங்களைப் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாய்மொழியில் பாடங்களைக் கற்றுத்தர விரும்பும் கல்லூரிகள் ஏ.ஐ.சி.டி.இ.யிடம் ஒப்புதல் பெற முறையாக விண்ணப்பிக்கலாம். அதேநேரத்தில் மாநில மொழிகளில் பாடங்களை கட்டாயம் கற்றுத்தரவேண்டும் என்று கல்லூரிகளுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »