Press "Enter" to skip to content

அமெரிக்காவில் ஏரியில் விமானம் விழுந்து நொறுங்கி 7 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஏரியில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் இருந்த 7 பேரும் ஏரியில் மூழ்கி பலியானார்கள்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் டென்னசி மாகாணம் ரதர்போர்ட் நகரில் உள்ள விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உட்பட 7 பேர் இருந்தனர். புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பெர்சி பிரைஸ்ட் ஏரிக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து விமானம் ஏரியில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 7 பேரும் ஏரியில் மூழ்கினர்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ரதர்போர்ட் நகரை சேர்ந்த மீட்புக் குழு உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர மீட்பு பணியில் இறங்கியது. பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் ஏரியில் இருந்து ஒரு உடல் மீட்கப்பட்டது. மற்ற 6 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. எனினும் அவர்கள் அனைவரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே டெக்சாஸ் மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியதில் ஒருவர் உயிர் இழந்ததும், அதேபோல் உட்டா மாகாணத்தில் நடந்த மற்றொரு விமான விபத்தில் ஒருவர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »