பெண்களுக்கான 10மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நார்வே மற்றும் கொரிய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர்.
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு நடைபெற்றது.
இந்தியா சார்பில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சந்தேலா ஆகியோர் கலந்து கொண்டனர். மொத்தம் 6 சீரிஸ், ஒரு சீரிஸ்க்கு 10 சுடுதல் என மொத்தம் 60 முறை சுடுதல் வேண்டும். ஒரு முறை இலக்கை துல்லியமாக சுட்டால் 11 புள்ளிகள் வழங்கப்படும்.
வாலறிவன் ஒன்று முதல் ஆறு சீரிஸில் முறையே 104.3, 104.0, 106.0, 104.2, 103.5, 104.5 புள்ளிகள் பெற்றார். இவர் பெற்ற மொத்த புள்ளிகள் 626.5 அவரை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்ல உதவவில்லை. வாலறிவன் 16-ம் இடத்தையே பிடித்தார். முதல் 8 வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தார்.
மற்றொரு வீராங்கனை அபூர்வி சந்தேலா ஆறு சீரிஸிலும் சேர்த்து 104.5, 102.5, 104.9, 104.2, 102.2, 103.6 (மொத்தம் 621.9) புள்ளிகள் பெற்று 36-ம் இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தார்.
நார்வே வீராங்கனை ஜீனேட் ஹெக் டியூஸ்டாட் 632.9 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். கொரிய வீராங்கனை 631.7 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar