தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றதால் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலைக் கட்டுப்படுத்த உதவியதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜெருசலேம்:
இஸ்ரேல் நாட்டில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதே வயதினருக்கான தடுப்பூசிக்கு இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் சுகாதாரத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.
குழந்தைகளுக்கு ஃபைசர்/பயோன்டெக் தடுப்பூசியைப் செலுத்துவது தொடர்பாக நிபுணர்களின் பரிந்துரையை சுகாதாரத்துறை தலைமை இயக்குனர் ஏற்றுக்கொண்டதாக சுகாதாரத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றதால் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலைக் கட்டுப்படுத்த உதவியதாகவும், டெல்டா மாறுபாட்டின் சமீபத்திய அலையை கட்டுக்குள் கொண்டுவர உதவியது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் குழந்தைகள் உட்பட தடுப்பூசி போடப்படாத மக்களிடையே கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொடர்ந்து பரவியது கவலையை ஏற்படுத்தியது.
எனவே, தற்போது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி இயக்கம் தொடங்கும் தேதி குறித்து இன்னும் சில தினங்களில் வெளியிடப்பட உள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar