தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி தமிழகம் வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
பிரதமர் மோடி அடுத்த மாதம் (ஜனவரி) 12-ந் தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினம் விருதுநகரில் நடைபெறும் விழாவில் தமிழகத்தில் புதிதாக தொடங்கும் 11 மருத்துவ கல்லூரிகளையும் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகள் 37 உள்ளன. இதில் 5,125 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன.
மருத்துவ கட்டமைப்பை விரிவுபடுத்தவும், கூடுதலான மருத்துவ மாணவர்களை சேர்க்கவும் வசதியாக புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில் தமிழகத்துக்கு 11 மருத்துவ கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன.
மருத்துவ கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களை தேர்வு செய்து அந்த மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவ கல்லூரி வீதம் 11 மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கான பணிகள் நடந்தன.
ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 150 மாணவர்கள் வீதம் 1,650 மாணவர்களை சேர்ப்பதற்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி இருக்கிறது.
அனைத்து கல்லூரிகளையும் மத்திய குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் போது சில குறைகள் சுட்டிக்காட்டப்பட்டது. அவற்றையும் தமிழக அரசு சீர் செய்ததை அடுத்து கல்லூரிகளை தொடங்க மருத்துவ கவுன்சில் அனுமதியளித்தது.
இந்த கல்லூரிகளின் திறப்புவிழா அடுத்த மாதம் (ஜனவரி) 12-ந்தேதி விருதுநகரில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்கி வைக்கிறார்.
இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து காரில் விருதுநகர் செல்கிறார்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மோடி தமிழகம் வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக மோடியை சந்தித்து பேசினார்.
விருதுநகரில் அடுத்த மாதம் நடைபெறும் விழாவில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அரசு விழாவில் ஒரே மேடையில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar