டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த விஞ்ஞானி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்றத்தில் உள்ள அறை எண் 102-க்குள் கடந்த டிசம்பர் 9-ம் தேதி திடீரென குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் மட்டும் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த விஞ்ஞானியான பாரத் பூஷன் கத்தரியா என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் குண்டுவெடிப்பு குறித்து விசாரித்தபோது, தனது அண்டை வீட்டுக்காரரான அமித் வஷிஸ்ட் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருவதாகவும், இருவருக்கும் இடையில் இருந்த பல வருட பிரச்சனையின் காரணமாக அவரை கொல்வதற்கு டிபன் பாக்ஸ் வெடிகுண்டு தயாரித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, ஏற்கனவே டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றதால் இந்த குண்டு வெடிப்புக்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என்று விசாரணையை தொடங்கினோம். டிசம்பர் 9-ம் தேதி நீதிமன்ற வளாகத்திற்கு வந்த வாகனங்கள் அனைத்தையும் 100 கண்காணிப்பு தொலைக்காட்சி ஒளிக்கருவி (கேமரா)க்களின் உதவியை கொண்டு சோதனை செய்தோம். நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் விசாரணை நடத்தினோம்.
டிபன் பாக்ஸ் குண்டு கொண்டு வரப்பட்ட பையில் ஒரு நிறுவனத்தின் அடையாளம் இருந்தது. அதை வைத்து தேடியபோது குற்றவாளியை கண்டுபிடித்தோம். கைது செய்யப்பட்டுள்ள விஞ்ஞானி இணையத்தில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி வெடிகுண்டை உருவாக்கியுள்ளார், என விளக்கம் அளித்துள்ளனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar