Press "Enter" to skip to content

மதுரையில் கொரோனா பீதி: ஒரே குடும்பத்தில் 4 பேர் வி‌ஷம் குடித்தனர் – 2 பேர் பலி

கொரோனா அச்சம் காரணமாக ஒரே குடும்பத்தில் 4 பேர் வி‌ஷம் குடித்ததும், அதில் தாய் மற்றும் மகன் இறந்ததும் மதுரையில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை:

மதுரை அருகே உள்ள கல்மேடு எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் நாகராஜன், கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (வயது 46). இவர்களது மகள்கள் அனிதா, ஜோதிகா (23), மகன் சிபிராஜ் (13).

அனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென இறந்து விட்டார். ஜோதிகாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவர் தனது கணவர் வல்லரசு மற்றும் மகன் ரித்திஷ் (3) ஆகியோருடன் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் நாகராஜ னுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஜோதிகா தனது பெற்றோர் வீட்டுக்கு மகனுடன் வந்து தந்தையை கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நாகராஜன் இறந்துவிட்டார்.

மகள் மற்றும் கணவர் அடுத்தடுத்து இறந்ததால் லட்சுமி வேதனைஅடைந்தார். இதனால் ஜோதிகா தாய்க்கு ஆறுதலாக அவருடன் அவரது வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோதிகாவுக்கு சளி, காய்ச்சல் மற்றும் இருமல் இருந்துள்ளது.

இதனால் அவர் அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஜோதிகா தனது தாயிடம் தெரிவித்துள்ளார். அதனை கேட்டு தாய் லட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.

ஒரு வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்து விட் டால் அனைவருக்கும் வந்து விடுமே என்று அவர் அச்சம் அடைந்துள்ளார். தங்களது குடும்பத்தில் ஏற்கனவே 2 பேர் இறந்து விட்டதை நினைத்து லட்சுமி மற்றும் ஜோதிகா வேதனை அடைந்தனர்.

கொரோனா வந்து குடும்பத்துடன் அவதிப்படுவதை விட குடும்பத்தோடு நிம்மதியாக இறந்து விடலாம் என்று ஜோதிகா தனது தாயிடம் தெரிவித்துள்ளார். அதற்கு தாய் லட்சுமியும் ஒப்புக் கொண்டார். நேற்று இரவு ஜோதிகா, அவரது தாய், தம்பி மற்றும் மகன் ஆகிய 4 பேரும் சாப்பிட்டு விட்டு படுக்க சென்றனர்.

அப்போது ஜோதிகா மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும், 3 வயது சிறுவன் ரித்திஷ் மற்றும் சிபிராஜிக்கு வி‌ஷத்தை (சாணி பொடி) குடிக்க கொடுத்தனர். பின்பு ஜோதிகா மற்றும் அவரது தாயும் பூச்சி மருந்தை குடித்தனர். சற்று நேரத்தில் 4 பேரும் மயங்கி விழுந்தனர்.

இந்நிலையில் இன்று காலை லட்சுமியின் வீட்டு கதவு வெகுநேரம் திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அதுகுறித்து சிலைமான் காவல் துறை நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடம் வந்து லட்சுமி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு ஜோதிகா மற்றும் அவரது மகன் ரித்திஷ் ஆகிய இருவரும் இறந்து கிடந்தனர். ஜோதிகாவின் தாய் லட்சுமி மற்றும் தம்பி சிபிராஜ் ஆகிய இருவரும் உயிருக்கு போராடியபடி கிடந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல் துறையினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்கள் 2 பேரும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை செய்து கொண்ட ஜோதிகா மற்றும் அவரது மகன் ரித்திஷ் ஆகிய இருவரது உடல்களையும் காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »