தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலையை பெயர்த்து வீசியவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை வடக்குவீதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை உள்ளது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் எம்.ஜி.ஆர். சிலையை உடைக்க முயன்றனர். ஆனால் உடைக்க முடியாததால் பெயர்த்து பீடத்தின் பின்புறம் சிலையை தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் எம்.ஜி.ஆர். சிலை பெயர்த்து பீடம் பின்புறம் தனியாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து சிலையை மீட்டு மீண்டும் பீடத்தில் வைத்தனர்.
இதுகுறித்து மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க.வினர் தஞ்சை மேற்கு காவல் துறை நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தஞ்சை வடக்குவாசல் கல்லறைமேட்டு தெருவை சேர்ந்த சேகர் (வயது 40) என்பவர் குடிபோதையில் சிலையை பெயர்த்து வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து சேகரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar