தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் தாயம்மாளின் செயல் மிகவும் ஊக்கம் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த இளநீர் விற்கும் பெண் தாயம்மாள் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி கட்டமைப்புக்காக ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கி இருந்தார்.
அவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இன்று மன்கீபாத் நிகழ்ச்சியில் பேசிய மோடி, தாயம்மாளை குறிப்பிட்டு பேசினார்.
கல்வி பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் ஒவ்வொரு மட்டத்திலும் தெரிகிறது. தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் தாயம்மாளின் செயல்மிகவும் ஊக்கம் அளிக்கிறது.
அவருக்கு சொந்தமாக நிலம் எதுவும் இல்லை. இவர்களது குடும்பம் பல ஆண்டுகளாக இளநீர் விற்று சம்பாதித்து வருகிறார்கள். பொருளாதார நிலை அவருக்கு நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தாயம்மாள் தனது மகன், மகளுக்கு கல்வி கற்பதற்கு எந்த தடைக்கல்லையும் ஏற்படுத்தவில்லை.
இவரது குழந்தைகள் சீன்னவீரம்பட்டு பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள். அந்த பள்ளியில் பெற்றோர்கள் கூட்டம் நடந்த போது, வகுப்பறைகள் மற்றும் பள்ளியின் நிலையை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
பள்ளியின் உள்கட்டமைப்புகளை சரி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த பணிக்கான பண பற்றாக்குறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அந்த கூட்டத்தில் தாயம்மாளும் பங்கேற்றிருந்தார். அவர் என்ன செய்தார் என்று யாராலும் நினைத்து பார்க்க முடியவில்லை. இளநீர் விற்று ஓரளவுக்கு சம்பாதித்த பணத்தை தாயம்மாள் பள்ளி கட்டமைப்புக்காக ரூ.1 லட்சம் நன்கொடை அளித்தார்.
உண்மையில் இதை செய்வதற்கு ஒரு பெரிய மனது, சேவை உணர்வு தேவை. அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு வரை இருப்பதாக தாயம்மாள் கூறுகிறார்.
இப்போது பள்ளியின் உள் கட்டமைப்பு மேம்பட்டால் மேல்நிலை கல்வி வரை வகுப்புகள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar