பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டுள்ளது.
அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சி களமிறங்கியுள்ளது.
காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் முதல் மந்திரி அமரீந்தர் சிங், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். காங்கிரசுக்கு இந்தக் கூட்டணி கடும் சவாலை அளிக்கும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 86 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி 2 கட்டங்களாக வெளியிட்டது. அதில் முதல்மந்திரி சரண் ஜித் சன்னி சம்குர் சாகிப் தொகுதியிலும், நவ்ஜோத் சிங் சித்து கிழக்கு அமிர்தசரஸ் தொகுதியிலும், சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட் மோகா தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 8 பேர் கொண்ட 3-வது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது.
இதில் பஞ்சாப் முதல் மந்திரி சரண்ஜித் சிங் சன்னி பதூர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar