Press "Enter" to skip to content

ரூ.3 கோடி மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை

மோசடி வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜேந்திர பாலாஜிக்கு அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ராஜேந்திர பாலாஜி இன்று ஆஜரானார்.

விருதுநகர்:

ஆவின் உள்ளிட்ட அரசு துறை நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி விஜயநல்லதம்பி, ரவீந்திரன் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளில் பிணை கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜிக்கு சுப்ரீம் நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியது. இதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு தொடர்பாக அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராஜ், வக்கீல் முத்துப்பாண்டி ஆகியோரிடம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் மன்னவன், கணேஷ்தாஸ் மற்றும் காவல் துறையினர் கடந்த 2 வாரங்களாக விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் மோசடி வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜேந்திர பாலாஜிக்கும் அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ராஜேந்திர பாலாஜி இன்று ஆஜரானார்.

அவரிடம் மோசடி வழக்குகள் தொடர்பாக குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினர். ராஜேந்திர பாலாஜியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »