Press "Enter" to skip to content

இன்று முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி

கடற்கரைகளில் மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கடந்த மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவற்றை தமிழக அரசு அமல்படுத்தியது. 

அதேபோல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள், தேவாலயங்களுக்கு மக்கள் செல்லவும், அனைத்து நாட்களும் கடற்கரைகளுக்குச் செல்லவும் தடை விதித்திருந்தது. 

தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவற்றை தமிழக அரசு ரத்து செய்தது. இதையடுத்து, பிப்ரவரி 1-ம் தேதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் இன்று முதல் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

கடற்கரைக்கு தங்களது குடும்பங்களுடன் வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இதனை கண்காணிக்க மாநகராட்சி பணியாளர்கள், காவல் துறையினர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »