Press "Enter" to skip to content

காணொலி காட்சி மூலம் ஈரோடு மாவட்டத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 106 இடங்களில் முதல்-அமைச்சரின் பிரசாரத்தை தி.மு.க. வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்கள், பொதுமக்கள் நேரடியாக பார்க்கும் வகையில் கணினி மயமான திரை அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங் கியுள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் தி.மு.க- அ.தி.மு.க இடையே தான் நேரடி போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி என்ற முழக்கத்தோடு காணொலி காட்சி மூலமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி கடந்த 6-ந் தேதி கோவையில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அதைத் தொடர்ந்து சேலம், கடலூர், நேற்று தூத்துக்குடி மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பிரசாரம் மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து இன்று 5-வது நாளாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, கோபிசெட்டிபாளையம், பவானி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் போட்டியிடும் தி.மு.க- கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை 5 மணிக்கு பிரசாரம் செய்கிறார்.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வதை பொதுமக்கள் நேரடியாக பார்க்கும் வகையில் 60 இடங்களில் பிரமாண்ட கணினி மயமான திரை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பெரியார் நகரில் 80 அடி சாலையில் பிரம்மாண்ட கணினி மயமான திரை அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி மற்றும் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதேபோல் 4 நகராட்சி, 42 பேரூராட்சி பகுதிகளிலும் பிரமாண்டமான கணினி மயமான திரை அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 106 இடங்களில் முதல்-அமைச்சரின் பிரசாரத்தை தி.மு.க. வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்கள், பொதுமக்கள் நேரடியாக பார்க்கும் வகையில் கணினி மயமான திரை அமைக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »