Press "Enter" to skip to content

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: பணம் வழங்குவதை தடுக்க கூடுதலாக 45 பறக்கும் படைகள் அமைப்பு

சென்னை நகர்புற உள்ளாட்சித் தேர்தல் கண்காணிப்பு பணி தொடர்பாக,  மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சி, 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளுக்கு  உட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஒரு மண்டலத்திற்கு மூன்று குழுக்கள் வீதம் 45 பறக்கும் படை குழுக்கள் ஏற்கனவே அமைக்கப் பட்டுள்ளன. 

ஆவணங்களின்றி தனிநபர் ஒருவர் ரொக்கமாக ரூ.50,000/-க்கு மேல் அல்லது ரூ.10,000/-க்கு மேற்பட்ட மதிப்புள்ள பரிசு பொருட்களை கொண்டு சென்றால் பறக்கும் படைக் குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. 

இது வரை தகுந்த ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் ரூ 18,13,598 ரொக்கமாகவும், ரூ 1,27,62,500 மதிப்புள்ள பொருட்களும் பறக்கும் படை குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கி வரும்  நிலையில் கண்காணிப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ஒரு மண்டலத்திற்கு மூன்று குழுக்கள் வீதம் 15 மண்டலங்களுக்கு மேலும் 45 பறக்கும் படை குழுக்கள் கூடுதலாக 17.02.2022 அன்று முதல் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றனவா என்பதனை கண்காணித்து எவ்வித பாகுபாடுமின்றி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் துணை வாக்காளர் பட்டியலுடன் சேர்த்து மொத்தம்  61,73,112 வாக்காளர்கள்  உள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பான விதி மீறல்கள் மற்றும் பணம், பரிசு பொருட்கள் குறித்த தகவல்களை மாநகராட்சி தலைமையிடத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை இலவச அழைப்பு எண் 

1800 425  7012 ல் தெரிவித்தால் உடனடியாக பறக்கும்படை குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »