தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைவதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவாக நாளை திருநெல்வேலி மாவட்டத்தில் காணொலி மூலம் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
சென்னை:
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற இருப்பதையொட்டி அரசியல் கட்சித் தலைர்களின் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் வேட்பாளர்களையும் ஒருங்கிணைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 6-ந்தேதி கோவை மாவட்டத்தில் தனது காணொலி பிரசாரத்தை தொடங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம், கடலூர், தூத்துக்குடி, ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தஞ்சை ஆகிய ஊர்களில் பிரசாரம் செய்துள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர் பிரசாரம் செய்யும்போது உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி என்று தி.மு.க. ஆட்சியின் 8 மாத சாதனைகளை எடுத்து கூறி பிரசாரம் செய்கிறார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்து பேசுகிறார். அவரது பிரசாரத்தால் கட்சி நிர்வாகிகள் உற்சாகம் அடைந்து தீவிரமாக வாக்கு கேட்டு வருகின்றனர்.
இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளையும் வேட்பாளர்களையும் ஒருங்கிணைத்து பிரசாரம் செய்கிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்தபடி மாலை 6 மணியளவில் பிரசார உரையாற்றுகிறார்.
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து அவர் பிரசாரம் செய்கிறார்.
அவரது பிரசாரத்தை 218 இடங்களில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar