Press "Enter" to skip to content

நாம் ஒன்றாக இருக்கிறோம் என்பதை உள்ளாட்சி தேர்தல் முடிவு காட்டும்- மு.க.ஸ்டாலின் காணொளி பிரசாரத்தில் உறுதி

தி.மு.க.வை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று காலங்காலமாக சொல்லப்பட்ட பொய்யை இன்றைக்கு சுக்குநூறாக உடைத்திருக்கோம் என்று காணொளி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை:

தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொளி பிரசார பதிவில் கூறி இருப்பதாவது:-

வணக்கம்.

எல்லோரும் நல்லா இருக்கீங்களா? தி.மு.க. ஆட்சிக்கு வந்து 8 மாதம் ஆகிறது. கழக அரசு அமைந்தால் நாங்கள் என்னவெல்லாம் செய்கிறோம் என்று சொன்னோமோ அதில் பெரும்பாலான வாக்குறுதிகளை இந்த 8 மாதத்தில் நிறைவேற்றிவிட்டோம்.

நம்ம ஆட்சியை வழி நடத்துவது ‘திராவிட மாடல் சிந்தனை’ அது என்ன திராவிட மாடல் சிந்தனை? அப்படின்னு கேட்கிறவங்களுக்கு என்னோட பதில், சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி இதை புரியும் படியாக சொல்கிறேன்.

வாய்ப்புகளும், வளங்களும், தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா தரப்பு மக்களுக்கும் எல்லா மாவட்டத்தில் இருக்கிற மக்களுக்கும், சரிசமமாக போய் சேரணும். இதில் எந்த ஜாதி, மத வர்க்க பாலின வேறுபாடும் இருக்கக்கூடாது.

ஒரு மாநிலத்தோட வளர்ச்சி என்பது அங்கிருக்கிற ஒரு சிலருக்கு மட்டும் சேருவதற்கு பதில் அங்கு வாழ்கின்ற எல்லா மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தணும். அதுதான் உண்மையான வளர்ச்சி. அதுதான் திராவிட சிந்தனை.

நாங்கள் கொண்டு வருகிற ஒவ்வொரு திட்டமும், இந்த சிந்தனையின் அடிப்படையில்தான் உருவாக்கப்படுது.

ஒரு லிட்டர் பாலுக்கு 3 ரூபாய் விலையை குறைத்தோம். பெண்களோட சமூக உரிமைகளையும், வாய்ப்புகளையும் அதிகரிக்க பெண்களுக்கு இலவச பேருந்து என்று திட்டம் கொண்டு வந்தோம்.

தமிழ்நாட்டில் அரசு வேலைகளில் தமிழருக்குத் தான் முன்னுரிமை என்று அரசாணை போட்டு நம்ம இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்துள்ளோம். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் அர்ச்சகராக நியமித்தோம்.

சமூக நீதி என்றால் தமிழ்நாடுதான் என்பதை இந்தியாவுக்கே காட்டி உள்ளோம். பட்டியலின பழங்குடியின மக்களோட கல்விக்கும், முன்னேற்றத்துக்கும், சிறப்பு திட்டங்களை கொண்டு வந்தோம்.

இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் என்று மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி அரசாங்கத்தின் அணுகுமுறையில் ஒரு புது மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம்.

தி.மு.க.வை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று காலங்காலமாக சொல்லப்பட்ட பொய்யை இன்றைக்கு சுக்குநூறாக உடைத்திருக்கோம்.

உதாரணத்துக்கு இந்த தி.மு.க. ஆட்சியில் தான் ஆக்கிரமிப்பில் இருந்த 1,789 கோடி ரூபாய் மதிப்புள்ள 180 ஏக்கர் கோவில் நிலங்களை மீட்டுள்ளோம். தேர்தல் அறிக்கையில் சொன்னது மாதிரி கோவில் சீரமைப்புக்காக 1,000 கோடி ரூபாய் நிதியை ஒதுக்க ஆரம்பித்துள்ளோம்.

ஆனால் மதத்தை வைத்து அரசியல் பண்றவங்களுக்கு தமிழ்நாட்டை பார்த்தால் ‘பிபி’ ஏறத்தான் செய்யும்.

என்னடா, நாமளும் என்னென்னவோ பண்ணி பார்க்கிறோம். அந்த மக்களோட ஒற்றுமையை ஒண்ணுமே பண்ண முடியவில்லை என்று வெறுப்பு இருக்கத்தான் செய்யும்.

சமூக நீதியையும், சமத்துவத்தையும் நிலை நாட்டுகிற நம்முடைய முயற்சிகளுக்கு எதிரா பல விதமான சவால்களை முன் வைக்குது நம்முடைய மத்திய அரசு. அதற்கு உதாரணமாக சொல்ல வேண்டுமானால் சிக்கலான இந்த கொரோனா சமயத்தில் கூட நமக்கு வர வேண்டிய 16,725 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை தராமல் இழுத்தடிக்கிறார்கள்.

தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நமக்கு வரவேண்டிய கொரோனா நிவாரண நிதியான 8,989 கோடி ரூபாயும், நமக்கு தரப்படவில்லை.

இந்த வருடம் மத்திய வரவு செலவுத் திட்டத்தை பார்த்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த சலுகையும் இல்லை, உதவிகளும் இல்லை.

மேலும், இந்த வரவு செலவுத் திட்டத்தில் முக்கியமான முன்னெடுப்பாக வைரத்துக்கு வரியை குறைத்து இருக்கிறார்கள். இதை கேட்டு அழுகிறதா? சிரிக்கிறதா என தெரியல.

100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை குறைத்து அந்த திட்டத்தையும் கேள்விக்குறியாக்கி விட்டார்கள். இந்த ஆதிக்க அணுகுமுறையோட நீட்சிதான் நீட் எக்சாம். நிறைய செலவு பண்ணி கோச்சிங் கிளாஸ் போகிறவங்களுக்குத்தான் பெரும்பாலும் நீட் மூலமாக மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது.

இதனால் வசதி இல்லாத, ஏழை மாணவர்களுக்கான வாய்ப்புகள் ரொம்பவும் குறைந்துவிட்டது. இது எவ்வளவு பெரிய சமூக அநீதி.

இந்த அநீதியை எதிர்த்து தான், நம் சட்டமன்றத்தில் ‘நீட்’ வேண்டாம் என்று சட்ட திருத்தம் செய்தோம். அந்த சட்ட முன்வரைவை ஆளுனருக்கு அனுப்பி வைத்தால், ஆளுனர் அதை நம்மளுக்கே திருப்பி அனுப்புகிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் கொண்டு வந்த சட்டத்தை தடுக்க நினைக்கிறது ஜனநாயக படுகொலை தானே? ஆனால் முந்தைய ஆட்சி மாதிரி இல்லாமல் நாம இந்த அநீதிக்கெல்லாம் துணை போகமாட்டோம். ஒரு போதும் நம் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

ஒவ்வொரு சவாலையும், போராடி வெல்வோம். நாமெல்லாம் ஒன்றாகத்தான் இருக்கிறோம். இனிமேலும் ஒன்றாகத்தான் இருப்போம் என்பதை இந்த உள்ளாட்சி தேர்தலோட முடிவு அவங்களுக்கு காட்டும்.

மாநில உரிமைக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் உள்ளாட்சியிலும் நம்ம ஆட்சி தொடரட்டும்.

உதய சூரியனுக்கும், மத சார்பற்ற கூட்டணி கட்சி சின்னங்களுக்கும் வாக்களிக்குமாறு உங்களை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

என்றென்றும் உங்களுடன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »