பா.ஜனதாவில் இணைந்த தே.மு.தி.க. வேட்பாளர் வேம்படையான் தே.மு.தி.க.வில் தலைமை பொதுக்குழு உறுப்பினராக இருந்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயகாந்தின் ரசிகர் மன்றத்திலும் இருந்துள்ளார்.
திருவொற்றியூர்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது.
தி.மு.க. கூட்டணி அமைத்தும், அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் தனித்தனியாகவும் களத்தில் உள்ளன.
இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்வதால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை மாநகராட்சி 20-வது வார்டில் தே.மு.தி.க. சார்பில் வேம்படையான் போட்டியிட்டார். அவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மணலி பகுதியில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து திறந்த வேனில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மணலி பெரிய தோப்பு பகுதியில் அண்ணாமலை பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது தே.மு.தி.க. வேட்பாளர்கள் வேம்படையான் தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் அங்கு வந்தார்.
அவர் அண்ணாமலை வேனில் ஏறி சந்தித்து பாரதீய ஜனதாவில் இணைவதாக தெரிவித்தார். பின்னர் அண்ணாமலைக்கு சால்வையும் அணிவித்தார். இதனால் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பா.ஜனதாவில் இணைந்த வேம்படையானுக்கு அண்ணாமலையும், கட்சி நிர்வாகிகளும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதன் பின்னர் அண்ணாமலை தொடர்ந்து வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பா.ஜனதாவில் இணைந்த தே.மு.தி.க. வேட்பாளர் வேம்படையான் தே.மு.தி.க.வில் தலைமை பொதுக்குழு உறுப்பினராக இருந்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயகாந்தின் ரசிகர் மன்றத்திலும் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் பா.ஜனதாவில் இணைந்திருப்பது தே.மு.தி.க. நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படியுங்கள்… மு.க.ஸ்டாலின் இன்று மாலை திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசாரம்
[embedded content]
Source: Maalaimalar