முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஓட்டுநர் ஜெகநாதன் அளித்த புகாரின் பேரில் தி.மு.க.வினர் 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை அ.தி.மு.க.வினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கினர்.
இதற்கிடையே, தி.மு.க. பிரமுகரை தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் ஜெயக்குமாரை நேற்று இரவு காவல் துறையினர் கைது செய்தனர். அதன்பின் அவரை காவல் துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், தி.மு.க. பிரமுகரை தாக்கிய புகாரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar