Press "Enter" to skip to content

மேகதாது அணை கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு: கர்நாடக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

அரசியல் சுயலாபத்திற்காக கர்நாடகத்தை ஆளும் பா.ஜ.க. அரசு இது போன்ற முன்னெடுப்புகளைச் செய்வது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

சென்னை:

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணைக் கட்ட தமிழக அரசு சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநில சட்டமன்றத்தில் இன்று மாநில அரசின் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மேகதாதுவில் அணைகட்ட 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசிடம் தேவையான அனைத்து அனுமதியும் பெற்று மேகதாது அணை திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேகதாது அணை திட்டம் தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கையை கர்நாடக ஒன்றிய நீர்வள ஆணையத்தில் கடந்த ஆண்டில் தாக்கல் செய்தபோதே தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையும் பொருட்படுத்தாமல் தமிழக விவசாயிகளின் நலனையும் கருத்தில் கொள்ளாமல் அரசியல் சுயலாபத்திற்காக கர்நாடகத்தை ஆளும் பா.ஜ.க. அரசு இது போன்ற முன்னெடுப்புகளைச் செய்வது இந்திய இறையாண்மைக்கு எதிரானது ஆகும்.

பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்காக இந்த அணை கட்டப்போவதாக கர்நாடக அரசு அறிவித்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையை ஒருக்காலும் விட்டுத்தர முடியாது. மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கர்நாடக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »