Press "Enter" to skip to content

பாதுகாப்பு பணியில் தனியார் நிறுவனங்களும் தேவைப்படும் – மத்திய உள்துறை மந்திரி தகவல்

தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

காசியாபாத்:

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்) தோற்றுவிக்கப் பட்டதன்  53வது ஆண்டு தினத்தை முன்னிட்டு காசியாபாத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை போன்ற அரசாங்கப் பாதுகாப்பு முகமைகள் மட்டும் பணியாற்ற முடியாது என்றார். படிப்படியாக இந்த பணியை தனியார் பாதுகாப்பு நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடியும் என்று அவர் கூறினார்.

பல்வேறு தனியார் தொழில்துறை மற்றும் உற்பத்தித் துறை பிரிவுகளுக்கு பயனுள்ள பாதுகாப்பை வழங்குவதற்கு தனியார் பாதுகாப்பு நிறுவனங்களும், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையும் இணைந்து பணியாற்ற முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து , மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள தொழில்துறை பிரிவுகளுக்கு அதிகரித்து வரும் ட்ரோன் தாக்குதல் உள்ளிட்ட அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அவற்றை எதிர்கொள்ளும் வகையில் தொழில்நுட்பத்தைத் தயாரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இதற்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும எல்லைப் பாதுகாப்புப் படை போன்றவற்றிற்கு சி.ஐ.எஸ்.எப். ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குறிப்பிட்டார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »