பேரறிவாளன் விரைவிலேயே நிரந்தரமாக விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று அவரது தாயார் அற்புதம்மாள் கூறினார்.
சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களையும் விடுதலை செய்யக்கோரி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை.
இந்த நிலையில் பரோலில் வெளியே வந்த பேரறிவாளன் தனக்கு பிணை வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். மனுவை விசாரித்த சுப்ரீம் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.
மகனின் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வரும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:-
மிக நீண்ட சட்ட போராட்டத்தை தொடர்ந்து சுப்ரீம் நீதிமன்றம் பிணை வழங்கி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. 32 வருடமாக ஜெயிலில் இருக்கும் அவனது பாதி வாழ்க்கை ஜெயிலி லேயே முடிந்துவிட்டது. சிறை வாசத்திலும் நல்ல ஒழுக்கத்தையும், படிப்பையும் வழங்கி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
எனக்கு வாழ்க்கையில் எதுவும் தேவையில்லை. எனது மகன் விடுதலையாக வேண்டும். பேரறிவாளனுக்கு ஏற்கனவே பரோல் வழங்கப்பட்டிருந்தாலும் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாது. இந்த பிரச்சினையையும் அவனது உடல் நிலையையும் கருத்தில் கொண்டு பிணை கிடைத்து இருக்கிறது.
நியாயம் என்றாவது ஜெயித்தே தீரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. விரைவிலேயே நிரந்தரமாக விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கையும் இதன் மூலம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar