Press "Enter" to skip to content

துருக்கியின் முயற்சியால் போர் முடிவுக்கு வருமா?: ரஷியா- உக்ரைன் மந்திரிகள் இன்று பேச்சுவார்த்தை

அதிகாரிகள் மட்டத்தில் மூன்றுமுறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையிலா், துருக்கியில் இன்று ரஷியா- உக்ரைன் மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பெலாரஸ் நாட்டில் இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. பிரான்ஸ் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க ரஷியா சில இடங்களில் போர் நிறுத்தத்தை அறிவித்தது. புதினுடன் நேரடியாக பேசினால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் ரஷியா- உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரிகள் முதல் முறையாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இதற்கான ஏற்பாட்டை துருக்கி செய்துள்ளது.

ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்- உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா ஆகியோர் துருக்கியில் உள்ள அண்டாலியா நகரில் இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள். இதற்காக இருவரும் அந்த நகருக்கு வந்துவிட்டனர்.

துருக்கி வெளியுறவுத்துறை மந்திரி மேவுலுட் கவ்சோக்லு இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார். ரஷியா- உக்ரைன் இடையே மத்தியம்சம் செய்வதில் துருக்கி முன் வந்தது. இருதரப்பினர் இடையே வலுவான உறவை பெறுவதில் அந்த நாடு ஆர்வமாக உள்ளது. ரஷியா- உக்ரைன் மந்திரிகள் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது துருக்கி வெளியுறவுத்துறை மந்திரி உடன் இருப்பார்.

முதல்முறையாக வெளியுறவுத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதால் இதில் உடன்பாடு ஏற்பட்டு போர் முடிவுக்கு வருமா? என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

இரு நாடுகள் இடையே எழுந்துள்ள முக்கிய பிரச்சினைகளில் தீர்வு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »