தேனியில் இன்று நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 11,000 பேர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தேனி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை வந்தார். அவருக்கு மதுரை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்-அமைச்சரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, பி.மூர்த்தி, தங்கம் தென்னரசு, அர.சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர், தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், எஸ்.பி. பாஸ்கரன், மேயர் இந்திராணி உள்ளிட்டோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
விமான ஓடுபாதையில் இருந்து தேர் மூலம் சிறப்பு பாதையில் வெளியே வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். வழி நெடுக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர் தேனி வைகை அணையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். பின்னர் தேர் மூலம் தேனிக்கு புறப்பட்டார். தேனி அன்னஞ்சி பிரிவு அருகே பைபாஸ் ரோட்டில் தனியார் மில் அருகே நடந்த விழாவில் 11,000 பேர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
முன்னதாக ஆண்டிப்பட்டியில் உள்ள காவல் துறை குடியிருப்புக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வேனை நிறுத்தச் சொல்லி குடியிருப்புக்குள் இருந்த பொதுமக்களை சந்தித்தார். அப்போது அங்குள்ள ஒரு காவல் துறைகாரரின் வீட்டுக்குள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென சென்றார். இதனை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு என்ன சாப்பாடு எனக் கேட்டார். உடனே அந்தப் பெண் தோசை என கூறினார். அதனைத் தொடர்ந்து எனக்கு குடிக்க தண்ணீர் கொடுங்கள் எனக் கேட்டார். உடனே அந்த பெண் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அதனை வாங்கி குடித்து விட்டு நன்றி கூறினார்.
அப்போது அங்கு நின்ற சிறுவர், சிறுமிகளிடம் உங்களுக்கு விளையாட்டு மைதானம் உள்ளதா? என கேட்டு அவர்களிடம் உரையாடினார். திடீரென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறை குடியிருப்புக்குள் வந்து பொதுமக்களிடம் எளிமையாக பேசியது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar