Press "Enter" to skip to content

“வாழ்வில் மீண்டும் வண்ணங்கள்…” – ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் ஹோலி வாழ்த்துக் கடிதம்

புதுடெல்லி: ”உங்களிடமிருந்து மறைந்துபோன வண்ணங்கள் மீண்டும் உங்கள் வாழ்வில் வந்தடையும்” என்று ஹோலி தினத்தன்று நடிகை ஜாக்குலினுக்கு மோசடி புகாரில் சிறையிலிருக்கும் சுகேஷ் சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார்.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடிகை ஜாக்குலினுக்கு, டெல்லி திஹார் சிறையில் இருக்கும் சுகேஷ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “சிறந்த அற்புதமான மனிதரும், என்றும் அழகானவருமான ஜாக்குலினுக்கு எனது இனிய ஹோலி நல்வாழ்த்துகள். இன்று வண்ணங்களுக்கான நாள். நான் உங்களுக்கு ஒரு சத்தியம் செய்கிறேன். உங்களிடமிருந்து மறைந்துபோன வண்ணங்கள் மீண்டும் உங்களிடம் வரும். 100 மடங்கு திரும்ப வரும். உங்கள் வாழ்வு வெளிச்சமடையும். இதற்கு நான் பொறுப்பு ஏற்கிறேன். உங்களுக்காக நான் எந்த எல்லைக்கும் செல்வேன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். என் வாழ்க்கைக்கு நீங்கள் எந்த அளவு அர்த்தமானவர் என்பது உங்களுக்கு தெரியும். நான் உங்களை காதலிக்கிறேன். மகிழ்ந்திருங்கள்” என்று தெரிவித்துளார்.

வழக்கின் பின்னணி: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அரசியல் செல்வாக்கு தனக்கு உள்ளதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர். ஏற்கெனவே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவரை டெல்லி காவல் துறையினர் கடந்த 2017-ல் கைது செய்து, திஹார் சிறையில் அடைத்தனர். அவர் மீது 21-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் முதலீட்டாளர்கள் சிவிந்தர் சிங் மற்றும் மல்விந்தர் சிங் ஆகியோர், ரூ.2000 கோடி பணமோசடி வழக்கில் 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

அந்த வழக்கிலிருந்து அவர்களை விடுவிப்பதாகக் கூறிய சுகேஷ் சந்திரசேகர், அவ்விருவரின் மனைவிகளிடமிருந்து ரூ.200 கோடி பணம் பெற்றுள்ளார். இந்த மோசடி தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் உட்பட 8 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சுகேஷ் சந்திரசேகர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த விசாரணையின்போது, சுகேஷ் பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரை, ரூ.9 லட்சம் மதிப்புள்ள 4 பெர்சிய பூனைகள் உட்பட ரூ.10 கோடி அளவில் பரிசுப் பொருட்கள் வழங்கியுள்ளார் என்பது தெரிய வந்தது. ஜாக்குலின் தவிர, மற்றொரு பாலிவுட் நடிகையான நூரா ஃபதேயிக்கும் ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ தேரை சுகேஷ் பரிசளித்துள்ளார். இவ்வழக்கு தொடர்பாக ஏற்கெனவே ஜாக்குலினும் நூரா ஃபதேயியும் அமலாக்கத் துறையினால் விசாரிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »