தமிழில், ‘சிவப்பதிகாரம்’, ‘குரு என் ஆளு’, ‘தடையறத் தாக்க’, ‘எனிமி’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நயன்தாராவால் ரஜினிகாந்துடன் (குசேலன்) தான் நடித்தக் காட்சிகள் நீக்கப்பட்டதாகப் புகார் கூறியுள்ளார்.
இதுபற்றி மம்தா மோகன்தாஸ் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்த் நடித்த அந்தப் படத்தில் நானும் நடித்திருந்தேன். அதில் இடம்பெற்ற பாடல் காட்சியில் பங்கேற்றேன். 4 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அப்போது ஏதோ தவறாக நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். இந்தப் பாடலில் நான் இருக்க மாட்டேன் என்றும் நினைத்தேன்.
பிறகு நினைத்தபடியே அந்தப் பாடலின் ஒரு ஷாட்டில் கூட நான் இல்லை. அதற்கு அதில் இடம்பெற்ற நடிகைதான் (நயன்தாரா) காரணம் என்பதைப் பிறகு அறிந்தேன். ‘அந்த நடிகை செட்டில் இருந்தால் நான் வரமாட்டேன்’ என்று அவர் இயக்குநரிடம் எச்சரித்ததும் தெரியவந்தது.
அதனால் அந்தப் பாடலில் இருந்துஓரங்கட்டப்பட்டேன். அது ஒரு வேதனையான அனுபவம். தேவையில்லாமல் என் 4 நாட்கள் அங்கு வீணானது” என்று தெரிவித்துள்ளார். மம்தாவின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Source: Hindu