Press "Enter" to skip to content

ஏப்.30-ல் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: தயாரிப்பாளர் சங்கம் தகவல்

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல் ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திரைப்பட கவுன்சில் உறுப்பினர்களான கமல்குமார், சீனிவாசன் உள்பட எட்டு தயாரிப்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், இரண்டு செயலாளர்கள், ஒரு பொருளாளர், 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய இந்தத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில், தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் இந்திய திரைப்பட சம்மேளனத்தில் நிர்வாகிகளாக உள்ளவர்கள் தவிர, வேறு சங்கங்களில் நிர்வாகிகளாக உள்ளவர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் போட்டியிட தகுதியில்லை என கவுன்சில் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாரபட்சமான இந்த திருத்தத்தை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும்.

மேலும், மார்ச் 26ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரி நியமிக்கப்படவில்லை. உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து, வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். இந்த தேர்தல் குறித்த அறிவிப்பை ரத்து செய்து , அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் மற்றும் நீதிபதி வி.பாரதிதாசன் ஆகியோரை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர் கிருஷ்ணா ஆஜராகி, நிர்வாகிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 1ம் தேதி நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் வகையில் அனைத்து நடைமுறைகளையும் காணொளி பதிவு செய்ய வேண்டும். தேர்தல் நடைபெறும் அன்றே வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். வாக்குஎண்ணிக்கை நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என மெமோ தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் தங்கள் கோரிக்கைகளை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிட்டு, தேர்தல் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »