பிரியதர்ஷினி புலிகொண்டா, காவ்யா கல்யாண்ராம், சுதாகர் ரெட்டி உட்பட பலர் நடித்துள்ள தெலுங்கு படம், ‘பலகம்’ (Balagam). வேணு இயக்கியுள்ள இதை தில் ராஜூ தயாரித்துள்ளார். சிறிய வரவு செலவுத் திட்டத்தில் உருவான இந்தப் படம் வசூலைக் குவித்து வருகிறது. விருதுகளையும் பெற்று வருகிறது.
மண்ணின் மரபுகள் மற்றும் கலாச்சாரத்தை இதில் அசலாகக் காட்டியிருக்கின்றனர். சிதைந்து வரும் மனித உறவுகள், பந்தங்களை இந்தப் படம் சிறப்பாகப் பேசியிருக்கிறது.
இந்நிலையில், இந்தப் படத்தை தெலங்கானாவின் பல பகுதிகளில் தெருவில் திரை கட்டி, இலவசமாகத் திரையிட்டுள்ளனர். இதை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாகக் கண்டுகளித்துள்ளனர். இதற்கு அப்பகுதி திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், தயாரிப்பாளர் தில் ராஜூ நிஜாமாபாத் போலீஸில் புகார் அளித்துள்ளார். பல கிராமங்களில் இந்தப் படத்தை இலவசமாகத் திரையிட்டுள்ளதால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் படத்தைத் திரையிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறியுள்ளார்.
Source: Hindu