“ரோமியோ பிக்சர்ஸுடனான தற்போதைய படத்திற்குப் பிறகு, அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைவேன்” என்று இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.
‘நேரம்’, ‘பிரேமம்’ படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். ‘பிரேமம்’ படத்துக்குப் பின்னர் மலையாளத்தில் பிருத்விராஜ் – நயன்தாரா நடித்த ‘கோல்டு’ என்கிற படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு இறுதியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அல்போன்ஸ் புத்திரன் நேரடித் தமிழ்ப் படம் ஒன்றை இயக்க கோலிவுட் வந்துள்ளார்.
இப்படத்தை ‘நெஞ்சுக்கு நீதி’, ‘வீட்ல விஷேசம்’ உள்ளிட்ட பல படங்களைக் கொடுத்த ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது. தமிழ், மலையாளம் என இருமொழிகளில் உருவாகும் இப்படத்துக்கான நடிகர்கள் தேர்வு சமீபத்தில் சென்னையில் நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்கும் அடுத்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாக அல்போன்ஸ் புத்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மூன்றாவது முறையாக இசையமைப்பாளர் இளையராஜாவை அண்மையில் சந்தித்தேன். இம்முறை நான் புகைப்படம் எடுக்க மறக்கவில்லை. அவரைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. ரோமியோ பிக்சர்ஸுடன் இணைந்து நான் பணியாற்றும் தற்போதைய படத்திற்குப் பிறகு, மேஸ்ட்ரோ இளையராஜாவுடன் இணைந்து அடுத்த படத்தில் பணியாற்றுவேன்” என பதிவிட்டுள்ளார்.
Met the “Raaja of Tamil Music” Maestro Ilaiyaraja sir the third time, a few days back. This time I dint forget to take the photo. I don’t need to explain about him. Will be collaborating with Maestro Ilaiyaraja sir for a film, after my upcoming film with Romeopictures. pic.twitter.com/5F1HSR2tEo
— Alphonse Puthren (@puthrenalphonse)
Source: Hindu