சூர்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் ‘வணங்கான்’ படத்தை இயக்குநர் பாலா தொடங்கினார். கன்னியாகுமரியில் இதன் முதல் ஷெட்யூல் தொடங்கிய நிலையில், பாலாவுக்கும் சூர்யாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னர் படத்தில் இருந்து சூர்யா விலகினார்.
‘இந்தக் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், சூர்யாவுக்கு இது உகந்ததாக இருக்குமா என்ற ஐயம் ஏற்பட்டது. இதனால் இந்தப் படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம்’ என்று இயக்குநர் பாலா அறிக்கை மூலம் தெரிவித்தார்.
பின்னர் இந்தப் படத்தில் அருண் விஜய் இணைய, படப்பிடிப்பைப் தொடங்கினார் பாலா. ரோஷிணி பிரகாஷ் நாயகியாக நடிக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடிக்கிறார். இந்தப் படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் இப்போது தொடங்கியுள்ளது.
இதை முடித்ததும் திருவண்ணாமலையில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அங்கு, பிரம்மாண்ட கிணறு அரங்கு அமைக்கப்பட இருக்கிறது. சுமார் 200 அடி ஆழம் கொண்ட இந்த அரங்கில் முக்கியமான காட்சிகள் படமாக்கப் படுகின்றன. அத்துடன் படப்பிடிப்பு முடிவடைய இருப்பதாகத் தெரிகிறது.
Source: Hindu