சென்னை: லியோ திரைப்படத்தின் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிக்கு காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க கோரிய வழக்கை அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், ’லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அதாவது நேரம் குறிப்பிடாமல் ஒருநாளுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருந்தது. முன்னதாக, எங்களது படக்குழு தரப்பிலிருந்து ’லியோ’ படத்தின் முதல் காட்சியை, அக். 19-ம் தேதி அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கும், 20-ம் தேதியில் இருந்து 24 -ம் தேதி வரை காலை 7 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசு ’லியோ’ படத்தின் சிறப்புக் காட்சி தொடர்பாக சில அறிவுரைகளை வழங்கியது. அதன்படி 19-ம் தேதி முதல் 24ஆம் தேதிவரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ’லியோ’ சிறப்புக் காட்சிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா கடிதம் எழுதியிருந்தார்.
அதில், ’அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்புக் காட்சி மட்டுமே திரையிட வேண்டும் என்ற உத்தரவின்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் கர்னல் கணேசன் நீதிபதி அனிதா சம்பத் முன்பு திங்கள்கிழமை ஆஜராகி அவசர முறையீடு செய்தார். லியோ படத்தின் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சியை காலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும். அதேபோல் காலை 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளோம். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கை அவசர வழக்காக பகல் ஒரு மணிக்கு விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
Source: Hindu