சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், ’லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அதாவது, நேரம் குறிப்பிடாமல் ஒரு நாளுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருந்தது.
இந்த சூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நேற்று (அக்.16) ஆஜரான, வழக்கறிஞர் கர்னல் கணேசன், நீதிபதி அனிதா சுமந்த் முன்பு ஆஜராகி அவசர முறையீடு செய்தார். லியோ படத்தின் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சியை காலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும். அதேபோல் காலை 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளோம். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (அக்.17) தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இன்று முதல் வழக்காக விசாரணைக்கு வந்த இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ‘லியோ’ படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் சனி, ஞாயிறுகளில் தான் விலக்கு, சாதாரண நாட்களில் விலக்கு தரமுடியாது என்று கூறிய நீதிபதி, அக்.19 முதல் 24 வரை அதிகாலை 7 மணி காட்சிக்கான அனுமதி குறித்து மறு ஆய்வு செய்வதற்காக முடிவை தமிழக அரசிடமே விடுவதாகவும், இது குறித்த உரிய உத்தரவை நாளை மதியத்துக்குள் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
Source: Hindu