Press "Enter" to skip to content

லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட உயர்நீதிநீதி மன்றம் தடை

சென்னை: லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜூன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் லியோ திரைப்படம் நாளை (அக்.19) உலகெங்கிலும் வெளியாக உள்ளது. லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக 1246 இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டுமென அரசு மற்றும் தனியாரின் இணையத்தள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீர்ன் நிறுவனத்தின் இயக்குனர் லலித்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், “லியோ திரைப்படம் நாடு முழுவதும் நாளை ஆயிரத்து 500 திரையரங்குகளுக்கு மேல் வெளியாக உள்ளது. மிகுந்த பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இதனால், சட்டவிரோதமாக இணையதளங்களில் இந்தப் படம் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும்.மேலும், இந்தப் படத்தில் பணியாற்றிய திரை கலைஞர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும்” என்று வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி , லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இணையதள நிறுவனங்கள், சட்டவிரோதமாக இத்திரைப்படம் வெளியாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »